கடந்த மாதம் 6ஆம் தேதி மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயில் யானை ’அபயாம்பிகை’ இந்து சமய அறநிலையத்துறை, மாயூரநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடந்த இந்தப் புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் வலம் வந்த யானை, முகாம் நிறைவடைந்து இன்று (மார்ச் 28) அதிகாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு மீண்டும் வந்தடைந்தது.
கோயிலுக்கு வந்த யானைக்கு இந்து அறநிலையத்துறை மயிலாடுதுறை ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டன. அப்போது, கோயிலுக்கு வந்த அபயாம்பிகை யானையை வரவேற்று நாய் ஒன்று சுற்றி சுற்றி வந்தது. கோயில் வாசலில் இறக்கி விடப்பட்டு கோயில் உள்ளே சென்ற யானையின் பின்னால் சென்றது. யானைக்கு பூஜை செய்த போதும் யானையை சுற்றியே வலம் வந்து உற்சாகமடைந்து.
இது குறித்து மயூரநாதர் கோயில் யானைப்பாகன் செந்தில், கூறுகையில், "வீட்டில் ஏழு வருடங்களாக வசிக்கும் அப்பு என்ற நாய் யானையுடன் நட்பாக பழகி வருகிறது. யானை கோயிலுக்கு சென்றால் எப்போதும் யானையை பின் தொடர்ந்து செல்லும். முகாமுக்கு சென்று 48 நாள்களுக்கு பிறகு திரும்பி வந்த யானை அபயாம்பிகை கண்டு மகிழ்ச்சி அடைந்தது. யானைக்கு போடும் பிஸ்கட்டை சாப்பிடுவதை நாய் அப்பு வாடிக்கையாக வைத்துள்ளது.
பிற நாய்கள் யானையின் அருகே சென்றால் அடித்து விரட்டிவிடும். அப்புவை கண்டால் பாசமுடன் விளையாடும்" என்று கூறினார். கோயிலுக்கு வந்த யானையை ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். யானை அபயாம்பிகை நாய் அப்புவின் நட்பு பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புத்துணர்வு முகாமிலிருந்து திரும்பிய மாயூரநாதர் கோயில் யானை