மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புளிச்சக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர், இயற்கை விவசாயி தினேஷ். விவசாயம் செய்வதோடு ஓய்வுநேரங்களில் கிராமம் கிராமமாக சென்று தமிழர் வீரவிளையாட்டு மரபுக்கலைகளை இலவசமாகப் பயிற்றுவித்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலேயே முடங்கிய ஏழை மாணவர்களுக்கு அந்தந்த கிராமத்திற்கே சென்று தற்காப்புக்கலைகளை பயிற்றுவிக்கத் தொடங்கிய தினேஷ் தற்போதும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரபுக்கலையை பயிற்றுவித்து வருகிறார்.
இன்று (அக்.4) ஆயுதபூஜையை முன்னிட்டு சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தில் கூடிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிலம்பக்கலை மாணவ, மாணவிகள் தங்களது வீர விளையாட்டு உபகரணங்களுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் பல்வேறு வீரவிளையாட்டுகளை நிகழ்த்திக்காட்டினர்.
3 வயது சிறுவர்கள் முதல் 20 வயது கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்டு நடுகம்பு, நெடுகம்பு, அலங்கார கம்பு, இரட்டைக்கம்பு, குத்துவரிசை, அரிவாள் வீச்சு, வாள்வீச்சு, பிச்சுவாகத்தி, வேல் கம்பு, கட்டைக்கால், சுருள் வாள் வீச்சு எனப் பல்வேறு வீரவிளையாட்டுகளை ஆடிக்காட்டினர். அப்போது சுற்றியிருந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவ, மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
செல்போன், தொலைக்காட்சி என மாறிய இன்றைய மாணவர்களிடையே மரபுவழி தற்காப்புக்கலை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு மனவலிமையையும், உடல் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய கிராம மக்கள் இளைஞர் தினேஷ் குமாரின் முயற்சியைப் பாராட்டினர்.
இதையும் படிங்க:சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்