நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாவும் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் என்பிஆர், என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் தொடரும். ரஜினிகாந்தை சந்திக்கச் சென்ற இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கருக்கே சிஏஏ பற்றிய புரிதல் இல்லை.
அவர் ரஜினிகாந்தை சந்தித்தது வேடிக்கையானது. விளம்பரத்திற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. ரஜினிகாந்துக்கு சிஏஏ குறித்த புரிதலே இல்லை என்று இந்து ராம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்திற்கு புரிதல் வேண்டுமென்றால் இந்து ராம் போன்றோர்களைச் சந்தித்து தெளிவுபெற வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
மேலும், அண்மையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மதகுருக்கள், ரஜினிகாந்தை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சார்மினாரில் மட்டும்தான் அணிவகுப்பா?' - ஹைதராபாத் காவல் துறைக்கு ஓவைசி கேள்வி