ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து நாகை அருகே பனங்குடி, திட்டச்சேரி ஆகியப் பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.6290.50 லட்சத்தில் 589 பணிகள் கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 89 பணிகள் மூலம் 574.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.525.40 லட்சத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 62 பணிகள் தொடங்கப்பட்டு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், மீதமுள்ள பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், தூர்வாரும் பணியில் துளி அளவு கூட முறைகேடு நடக்காமல் இருக்க உழவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைவாகவும் அதே நேரத்தில் தரமானதாகவும் இருக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க:
ஊருக்குள் புகுந்த ராட்சத முதலை: 4 மணி நேரமாகியும் பிடிக்க வராத வனத் துறை!