மதுரை மாவட்டம் புதூர் விஸ்வநாதநகர் பகுதியைச் சேர்ந்த கோபாலசாமி என்ற இளைஞர், தனது நண்பரை சந்திப்பதற்காக தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் கோபாலசமியை ஓட ஓட விரட்டி ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் கோயில் அருகேயுள்ள மண்டகப்படியில் நிலைகுலைந்து விழுந்தார். உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த அவரை மீட்க பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கோபாலசாமி உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது எட்டு பேர் கொண்ட கும்பல் இளைஞரை வெட்டியதாகவும், பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துச் சென்றதாகவும் கூறினர். இந்தக் கொடூரக்கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோயில் முன்னாலேயே இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைமறைவாக இருந்த கொலையாளி - அதிரடியாக கைது செய்த தனிப்படை காவல்துறையினர்!