மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குண்டாறு நதி செல்கிறது. இப்பகுதியில் நேற்று (ஆக.08) மதியம் துர்நாற்றம் கலந்த புகை குடியிருப்புப் பகுதிக்குள் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் ஆற்றுப்பகுதியில் சென்று பார்த்தபோது, தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் எரிந்த உடலை ஆய்வு செய்தபோது 70 விழுக்காடு எரிந்த நிலையிலும், வலது கை உடைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் என கண்டுபிடித்தனர்.
முதலில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் என்ற கோணத்தில் திருமங்கலம் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். பின் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடலை ஆய்வு செய்ததில், இறந்த பெண் 60 வயது மதிக்கத்தக்கவர் என்பது தெரியவந்தது.
அந்தப் பெண் எதற்காக கொலை செய்யப்பட்டார் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.