மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துபாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பெரியகருப்பன் (22). இவர் ஊருக்கு அருகே மலை அடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் பருத்தி சாகுபடி செய்த வந்த நிலையில், தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்வதற்காக தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த கரடி ஒன்று வேலை செய்துகொண்டிருந்த பெரியகருப்பனை கடித்துக் குதறியது.
இந்நிலையில், அருகிலுள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், படுகாயத்துடன் இருந்த பெரியகருப்பனை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பெரியகருப்பன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முத்துபாண்டிபட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியதை தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிகளில் விரட்டியடித்தனர். தற்போது கரடிகளும் நடமாட தொடங்கியுள்ளதால், அக்கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பணத்திற்காக குழந்தையை விற்றுவிட்டு விசாரணைக்கு வர மறுத்த தம்பதி: போலீஸ் வலைவீச்சு!