கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும், தினக் கூலித் தொழிலாளர்கள், குடிபெயர் தொழிலாளர்கள், சிறு, குறு வியாபாரிகள் என பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் ஆட்டோ, வாடகைக் கார் ஓட்டுநர்கள் ஒரு புறம் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மதுரை, எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே உள்ள ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டம் குறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் தங்கபாண்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். 144 தடை உத்தரவு காரணமாக ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் தமிழ்நாடு முழுவதும் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் துயரத்தில் உள்ளனர்.
ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதும் 56 ஆயிரம் பேர் வாகனம் ஓட்டும் தொழிலில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, தற்போது உணவுக்கே வழியின்றி துன்பத்தில் உள்ளனர். ஆகையால் பாதிக்கப்படும் ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு மாதம் தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், ஓட்டுநர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், அண்ணா நகர் பகுதி காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க : சுங்க கட்டணங்களை மாற்றியமைக்கக் கோரிய நீதிபதி உத்தரவுக்கு எதிரான மனு தள்ளிவைப்பு!