கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் பல்வேறு மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
அந்த வகையில், மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகே உள்ள உச்சபட்டியில் இலங்கை அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்து வருவதால், தற்போது வேலையில்லாமல் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 500 குடும்பங்களுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் அடங்கிய 500 பைகளை தன்னார்வலர்களுடன் இணைந்து வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேஷன் பேசுகையில், "ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை தன்னார்வலர்கள், மதுரை காய்கறி விற்பனையாளர்கள் சங்கத்துடன் இணைந்து, முகாமில் உள்ள மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு வழங்கக்கூடிய நிவாரணப் பொருள்கள், சலுகைகள் அனைத்து மக்களுக்கும் சரியாக சென்று சேர வேண்டும்.
இக்கட்டான இந்த நேரத்தில்தான் அரசு கருணையுடன் செயல்பட வேண்டும். தனிநபர் லாப நோக்கோடு செயல்படக் கூடாது" என்றார்.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓவியர்கள்!