புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பழனியம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆவூர் ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கான தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. நானும் எலிசா என்பவரும் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டோம். எனக்கு ஐந்து உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், எலிசாவிற்கு நான்கு உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். இந்நிலையில் உதவி தேர்தல் அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவரை, துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதித்தார். அதற்கு நான் ஆட்சேபம் தெரிவித்தேன். ஆனால், அதனை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்துவிட்டார். இந்தத் தேர்தலில் இருவருக்கும் தலா 5 வாக்குகள் கிடைத்தது. ஆனால், மறைமுகமாக குலுக்கல் முறையில் நடத்தி எலிஸா வெற்றிபெற்றதாக அறிவித்தார். நேர்மையான முறையில் தேர்தல் நடந்தியிருந்தால் நான் வெற்றி பெற்று இருப்பேன்.
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் விதியில், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் தேர்தலில், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் வாக்காளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
95ஆவது பிரிவு மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்வுக்கான நடைமுறை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்வு முறைக்கும் பொருந்தும் எனக் குறிப்பிடுகிறது. அவ்வாறு இருக்கையில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவரை துணைத் தலைவர் தேர்தலில் வாக்காளராக சேர்த்தது தவறு. எனவே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு வாக்குரிமை அளிக்கும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் விதியை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். ஆவூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தமிழ்நாடு அரசை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: கருணை இல்லத்துக்கு கிடைத்த அரசின் கருணை!