ஒரு பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மதுரை மாவட்டம் கரும்பாலையில் 20க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கம்பீரமாய் நிமிர்ந்து வளர்ந்துள்ளன.
இந்த மரங்களை வளர்த்து வரும் 67 வயது முதியவர் சீனிராஜன் இதிலிருந்து விழும் பனம்பழங்களைச் சேகரித்து தன் வீட்டுக்குப் பின் புறம் உள்ள வெற்றிடத்தில் பதியம் செய்து அதன் மூலம் பனங்கிழங்காக அறுவடை செய்துவருகிறார். பிளாஸ்டிக் கழிவு பொருட்களை தரம் பிரித்து விற்பனை செய்வது தான் இவரது பிரதான தொழில். பனங்கிழங்கு உணவின் அருமையை அனைவருக்கும் உணர்த்தவே இதை செய்துவருகிறார் சீனிராஜன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என் வீட்டிற்கு பின்புறம் உள்ள பனை மரங்களில் இருந்து பனம் பழங்களை சீசன் நேரத்தில் சேகரித்து வைப்பேன். அதனை வீட்டிற்கு பின்புறம் நூற்றுக்கணக்கில் பதியம் செய்து பராமரிக்கிறேன்.
100 நாள்களுக்கு பிறகு அவற்றில் இருந்து பனங்கிழங்குகளை அறுவடை செய்து எனது அக்கம்பக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறேன்" என்கிறார். மேலும், "பனைமரத்தின் அருமைகளை நாம் உணராமல் இருக்கிறோம் அதிலிருந்து கிடைக்கும் கிழங்கு மிக அற்புதமான உணவாகும்.
பனங் கிழங்குகளை வழங்கும்போது இதன் அருமை பெருமைகளை சொல்லி வழங்குகிறேன். நம் உடல் நலனுக்கு ஏற்ற உணவு. கடவுள் கொட்டிக்கொடுக்கும் இந்தப் பனம் பழங்களை நான் பதியம் போட்டு கிழங்காக அறுவடை செய்து வழங்குவது எனது கடமையாகக் கருதுகிறேன். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தான் பனம் பழங்கள் நிறைய விழும் அச்சமயத்தில் அவற்றை எடுத்து சேகரித்து வைத்துக் கொள்வேன்" என்கிறார்.
![பனங்கிழங்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12035954_thum.png)
மதுரை மாநகர் பகுதிகளில் ஆங்காங்கு ஒரு சில பனை மரங்களே உள்ள நிலையில், இருக்கின்ற ஓரிரு மரங்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். சீனிராஜனுக்கு உதவியாக இருக்கும் அவரது மனைவி எஸ்தர் கூறுகையில், நமது பழைய மரபுகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம் இனி வருகின்ற தலைமுறையினர் இதனை பின்பற்றி செயல்பட வேண்டும் என்கிறார்.
'கஷ்டத்திலும் காளைகளை காக்கும் காளையன்' - ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கான உத்வேகம்
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணியை சீனிராஜன்-எஸ்தர் தம்பதியர் மிக மனமுவந்து செய்து வருகின்றனர். அது மட்டுமன்றி தங்கள் பகுதிகளில் உள்ள சிறு குழந்தைகளையும் அழைத்து அவர்களுக்கும் பனை மரத்தின் பயன்களை விளக்கி கொட்டைகளை பதியம் போடுகின்ற முறையையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.
சமூக ஆர்வலர் அசோக் குமார் கூறுகையில், மதுரை நகர்ப்புறத்தில் இருக்கக்கூடிய கரும்பாலையில், இதுபோன்ற பணிகளை செய்வது என்பது வியப்புக்குரியது தான். பனை விதைகளை பதியம் போட்டு கிழங்கு எடுக்கின்ற நடைமுறை கிராமப்புற பகுதிகளில் கூட அருகிவிட்ட நிலையில் நகர்ப்பகுதியில் இந்த பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரியது.
தாங்கள் அறுவடை செய்த கிழங்குகளை பிறருக்கு வழங்கும் போது அதன் பயன்பாடுகளை சொல்லிக் கொடுப்பது என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்கிறார்.
![பனங்கிழங்கை தோண்டி எடுக்கும் முதியவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12035954_thu.png)
நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள் தற்போது வழக்கொழிந்து வரும் நிலையில் சீனிராஜன் போன்ற ஆர்வலர்கள் மீண்டும் மீண்டும் அதனை நினைவுறுத்தி வருகிறார்கள். வாழ்க்கையின் எல்லா விதத்திலும் துணையாக இருக்கும் பனையை போற்றிப் பாதுகாப்பது நம் கடமை...
இதையும் படிங்க;
'பருத்திப்பால் வியாபாரியான எம்.காம்., பட்டதாரி' - 3 தலைமுறையின் பாரம்பரியம்