மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில்,"127 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானவர்களுக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில்தான் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் மயமானது. மு.க.ஸ்டாலின் அனைத்தையும் மறந்து விடுகிறார். அவருக்கு அம்னீசியா நோய் என நினைக்கிறேன். மு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்துள்ளதால் அரசைக் குற்றம்சாட்டி பேசி வருகிறார்.
![அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு திமுக குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு Minister Sellur Raju's press Meet in Madurai Minister Sellur Raju's Talks About DMK Party Alliance Minister Sellur Raju](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10352507_mdu12.png)
தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில், பரப்புரை செய்வதால் எந்தவொரு தாக்கமும் ஏற்படாது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நல திட்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் மக்கள் விரோத திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
திமுக கூட்டணி உள்ளே பிரச்னை வந்துவிட்டது, திமுக கூட்டணிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்படும். தூக்கு மேடைக்கு போன ஏழு தமிழர்களை காத்தவர் ஜெயலலிதா. இது சர்வதேச பிரச்னையாக உள்ளது. ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: பதவிக்காகவே டெல்லிக்கு சென்றவர்கள் திமுகவினர் - அமைச்சர் செல்லூர் ராஜு!