கடந்த 1996ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்றார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
ஏற்கெனவே, அண்ணா பிறந்தநாளில் குற்றவாளிகள் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும், நிலை அறிக்கைத் தாக்கல் செய்யவும் கோரி உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறிக்கைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதேபோல் 13 பேருக்கும் நீதிமன்றத்தின் நோட்டீஸ் சென்றடையவில்லை எனவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 13 பேருக்கும் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை மேலூர் டி.எஸ்.பி. கொண்டு சேர்ப்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அன்றைய தினம் அரசுத் தரப்பில் நிலை அறிக்கையையும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சாரதா சிட்பண்ட் மோசடி - ராஜிவ்குமாரின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரிய விசாரணை ஒத்திவைப்பு!