ETV Bharat / state

லண்டனுக்கு ஏற்றுமதியாகும் வாழைநார் காலணிகள் - அசத்தும் பெண்முனைவோர்

author img

By

Published : Sep 3, 2021, 9:19 PM IST

கிராமப்புற பெண்களைக் கொண்டு வாழைநாரினாலான காலணிகளைத் தயாரித்து லண்டனுக்கு ஏற்றுமதி செய்து அசத்திவருகிறார் பெண் தொழில்முனைவோரான கற்பகம். இது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு...

nm
bn

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே உள்ள மூணான்டிப்பட்டியில் அமைந்துள்ளது மகிழம் நிறுவனம். இந்த நிறுவனத்தை கற்பகம் என்பவர் நடத்திவருகிறார். நிறுவனம் தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில், உள்ளூரைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களால் தயாரிக்கப்படும் பனை, வாழை நாரினாலான பொருள்களை கனடா, லண்டன், சுவிட்சர்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அசத்திவருகிறார்.

பனையோலைகளால் ஆன கொட்டான்கள், இடியாப்பத் தட்டு, புட்டுக் கொட்டான், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவையும், வாழை நாரிலான தோள்பைகள், காலணிகள் ஆகியவையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றது.

இது குறித்து கற்பகம் பேசுகையில், "மகிழம் என்டர்பிரைஸஸ் என்ற பெயரில் ஆறு மாதங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்டதுதான் இந்த நிறுவனம். கிராமப்புறப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகவும், மண், மரபு சார்ந்த தொழில் என்ற அடிப்படையிலும் இதனைத் தொடங்கினேன்.

இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள 29 கிராமங்களுக்குப் பயணம் செய்து ஆய்வுமேற்கொண்டேன். தொழில் தொடங்குவதற்குப் பணத்தைவிட அத்தொழிலுக்கான மூலப் பொருள்கள் எளிதாகக் கிடைப்பது என்பது மிக அவசியம். எனது வெற்றிக்கு இந்தச் சூத்திரம்தான் முக்கியக் காரணம்" என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "வாழை மரத்தின் கழிவுகளைக் கொண்டு கூடைகள் பின்ன பெண்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் தயார்ப்படுத்தினேன். இதன் மூலம் மதுரை மாவட்டம் மேலூரில் மட்டும் 250 பெண்களுக்கு வேலை சாத்தியமாகியது. பிறகு பனை ஓலையிலும் பொருள்கள் செய்ய ஆரம்பித்தோம். கருப்பட்டி, பனம் பழம், பனங்கிழங்கு ஆகியவற்றையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவருகிறோம்" என்கிறார்.

அண்மைக் காலமாக பாரம்பரிய பொருள்கள் மீது மக்களுக்கு ஏற்படுகின்ற ஈர்ப்பைப் பயன்படுத்தி உள்ளூரில் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சியை கற்பகம் மேற்கொண்டுவந்தாலும், வெளிநாட்டுச் சந்தையே தனக்கு கை கொடுப்பதாகக் கூறுகிறார். காரணம், வாழை நார் கழிவுகளில் செய்யப்படுகின்ற பொருள்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றார்.

"கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது எங்களின் முதன்மை நோக்கம். இயற்கை சார்ந்த பொருள்களே எங்களது தொழிலின் வெற்றிக்கான காரணம். அதனையே தொடர்ந்து மேற்கொள்வோம். தற்போது கனடா, லண்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறோம்.

மேலும் பல நாடுகளிலிருந்து எங்களுக்கு கோரிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன. உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவுசெய்துள்ளோம். இதன் மூலம் கூடுதலாக 100 பெண்களுக்காவது வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர முடியும்" என்று நம்பிக்கையோடு கூறுகிறார் கற்பகம்.

அந்தந்தப் பகுதிகளில் விளையும் பொருள்களைக் கொண்டே ஒரு தொழிலுக்கான மூலப் பொருளை உத்தரவாதப்படுத்த முடிந்தால், அந்தத் தொழிலின் வெற்றி என்பது மிக மிகச் சாத்தியமான ஒன்றே என்பதை தன்னுடைய நிறுவனத்தின் வாயிலாக உறுதிசெய்திருக்கிறார் கற்பகம்.

மூணான்டிபட்டியைச் சேர்ந்த பேச்சி கூறுகையில், 'இந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியம் உருவாக்குவதற்காக எங்களது நிலங்களையெல்லாம் அரசாங்கம் எடுத்துவிட்டது. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில், இந்தத் தொழில்தான் கை கொடுக்கிறது. கொட்டான், தட்டி முடைதல், வாழைநாரில் காலணிகள் செய்வது போன்ற வேலைகளைச் செய்துவருகிறோம்' என்கிறார்.

மகிழம் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு பெண் வினிதா கூறுகையில், "இங்கு வாழை நார், பனை ஓலைகளில் பொருள்கள் செய்வது குறித்து பயிற்சியளித்து வேலை தருகின்றனர். எங்கள் ஊரைச் சேர்ந்த நிறைய பெண்கள் இங்கு வேலை செய்து பயன்பெறுகின்றனர். இந்தப் பகுதி மக்கள் சார்பாக மகிழம் நிறுவனத்திற்கு நன்றி" என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

மரபு சார்ந்த தொழிலின் மூலமாக கிராமம், கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்படும்போது நாட்டின் வளர்ச்சியும் சாத்தியமாகிறது. மதுரை அருகே சத்தமின்றி நிகழ்ந்துவரும், இந்த மாற்றத்தின் தொடக்கம் நாடு முழுவதும் விரிவடைய வேண்டும்.

ஒரு புறம் வெளி நாட்டு ஆர்டர்கள் மறுபுறம் பெண்களுக்கு வேலை என தான் வகுத்த பாதையில் வெற்றி நடைபோடுகிறார் சாதனை பெண் கற்பகம்.

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே உள்ள மூணான்டிப்பட்டியில் அமைந்துள்ளது மகிழம் நிறுவனம். இந்த நிறுவனத்தை கற்பகம் என்பவர் நடத்திவருகிறார். நிறுவனம் தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில், உள்ளூரைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களால் தயாரிக்கப்படும் பனை, வாழை நாரினாலான பொருள்களை கனடா, லண்டன், சுவிட்சர்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அசத்திவருகிறார்.

பனையோலைகளால் ஆன கொட்டான்கள், இடியாப்பத் தட்டு, புட்டுக் கொட்டான், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவையும், வாழை நாரிலான தோள்பைகள், காலணிகள் ஆகியவையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றது.

இது குறித்து கற்பகம் பேசுகையில், "மகிழம் என்டர்பிரைஸஸ் என்ற பெயரில் ஆறு மாதங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்டதுதான் இந்த நிறுவனம். கிராமப்புறப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகவும், மண், மரபு சார்ந்த தொழில் என்ற அடிப்படையிலும் இதனைத் தொடங்கினேன்.

இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள 29 கிராமங்களுக்குப் பயணம் செய்து ஆய்வுமேற்கொண்டேன். தொழில் தொடங்குவதற்குப் பணத்தைவிட அத்தொழிலுக்கான மூலப் பொருள்கள் எளிதாகக் கிடைப்பது என்பது மிக அவசியம். எனது வெற்றிக்கு இந்தச் சூத்திரம்தான் முக்கியக் காரணம்" என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "வாழை மரத்தின் கழிவுகளைக் கொண்டு கூடைகள் பின்ன பெண்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் தயார்ப்படுத்தினேன். இதன் மூலம் மதுரை மாவட்டம் மேலூரில் மட்டும் 250 பெண்களுக்கு வேலை சாத்தியமாகியது. பிறகு பனை ஓலையிலும் பொருள்கள் செய்ய ஆரம்பித்தோம். கருப்பட்டி, பனம் பழம், பனங்கிழங்கு ஆகியவற்றையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவருகிறோம்" என்கிறார்.

அண்மைக் காலமாக பாரம்பரிய பொருள்கள் மீது மக்களுக்கு ஏற்படுகின்ற ஈர்ப்பைப் பயன்படுத்தி உள்ளூரில் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சியை கற்பகம் மேற்கொண்டுவந்தாலும், வெளிநாட்டுச் சந்தையே தனக்கு கை கொடுப்பதாகக் கூறுகிறார். காரணம், வாழை நார் கழிவுகளில் செய்யப்படுகின்ற பொருள்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றார்.

"கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது எங்களின் முதன்மை நோக்கம். இயற்கை சார்ந்த பொருள்களே எங்களது தொழிலின் வெற்றிக்கான காரணம். அதனையே தொடர்ந்து மேற்கொள்வோம். தற்போது கனடா, லண்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறோம்.

மேலும் பல நாடுகளிலிருந்து எங்களுக்கு கோரிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன. உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவுசெய்துள்ளோம். இதன் மூலம் கூடுதலாக 100 பெண்களுக்காவது வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர முடியும்" என்று நம்பிக்கையோடு கூறுகிறார் கற்பகம்.

அந்தந்தப் பகுதிகளில் விளையும் பொருள்களைக் கொண்டே ஒரு தொழிலுக்கான மூலப் பொருளை உத்தரவாதப்படுத்த முடிந்தால், அந்தத் தொழிலின் வெற்றி என்பது மிக மிகச் சாத்தியமான ஒன்றே என்பதை தன்னுடைய நிறுவனத்தின் வாயிலாக உறுதிசெய்திருக்கிறார் கற்பகம்.

மூணான்டிபட்டியைச் சேர்ந்த பேச்சி கூறுகையில், 'இந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியம் உருவாக்குவதற்காக எங்களது நிலங்களையெல்லாம் அரசாங்கம் எடுத்துவிட்டது. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில், இந்தத் தொழில்தான் கை கொடுக்கிறது. கொட்டான், தட்டி முடைதல், வாழைநாரில் காலணிகள் செய்வது போன்ற வேலைகளைச் செய்துவருகிறோம்' என்கிறார்.

மகிழம் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு பெண் வினிதா கூறுகையில், "இங்கு வாழை நார், பனை ஓலைகளில் பொருள்கள் செய்வது குறித்து பயிற்சியளித்து வேலை தருகின்றனர். எங்கள் ஊரைச் சேர்ந்த நிறைய பெண்கள் இங்கு வேலை செய்து பயன்பெறுகின்றனர். இந்தப் பகுதி மக்கள் சார்பாக மகிழம் நிறுவனத்திற்கு நன்றி" என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

மரபு சார்ந்த தொழிலின் மூலமாக கிராமம், கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்படும்போது நாட்டின் வளர்ச்சியும் சாத்தியமாகிறது. மதுரை அருகே சத்தமின்றி நிகழ்ந்துவரும், இந்த மாற்றத்தின் தொடக்கம் நாடு முழுவதும் விரிவடைய வேண்டும்.

ஒரு புறம் வெளி நாட்டு ஆர்டர்கள் மறுபுறம் பெண்களுக்கு வேலை என தான் வகுத்த பாதையில் வெற்றி நடைபோடுகிறார் சாதனை பெண் கற்பகம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.