மதுரை : மேலூரில் கடந்த ஒரு வாரமாக பிளானட் எக்ஸ் மற்றும் ஜி.ஆர்.பி. ஹெலிகாப்டர் டூரிஸம் ஆகிய நிறுவனங்களில் சார்பில் மதுரையை ஹெலிகாப்டர் மூலமாக சுற்றிபார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இதில் சுமார் அரை மணி நேரத்திற்கு மதுரையை ஹெலிகாப்டர் மூலமாக ஆகாயமார்க்கமாக சுற்றி பார்ப்பதற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயணித்து வந்தனர். இந்நிலையில் மதுரை கோட்ட வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து ஹெலிகாப்டர் இயக்கப்படுவதை அறிந்து நேரில் சென்று வரிவிதிப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் ஹெலிகாப்டர் மூலமாக கட்டணம் வசூலித்து சுற்றுலா பயணம் மேற்கொண்ட நிலையில் முறையாக வரி செலுத்தவில்லை என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு வணிகவரி புலனாய்வுத்துறை அலுவலர்கள் ரூ.4.25 லட்சம் வரி விதித்துள்ளனர்.