மதுரை: ஆன்மிகத்தின் அடையாளமாக மதுரையை மாற்றிய அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகள் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி பழைய நிலைக்குத் திரும்பி உள்ளது. அதிகளவிலான பக்தர்களின் வருகையால் கோயிலில் காணிக்கை வசூலும் பெருகி உள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர், கோயிலின் வருவாய் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோயில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலின் வருவாய் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உண்டியல் மூலமாக 100 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008 முதல் 2022 நவம்பர் வரை 100 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 913 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு முந்தைய 2018-19-ல் மட்டும் அதிகபட்சமாக 9 கோடியே 82 லட்சத்து 84 ஆயிரத்து 220 ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளதாகவும், அதேநேரம் 2008-2009 காலகட்டத்தில் குறைவாக 3 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரத்து 221 ரூபாய் காணிக்கை வசூலாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் காணிக்கை வருமானம் அதிகரித்தே உள்ளது. இடையில் கரோனா காலகட்டத்தில் மட்டும் உண்டியல் வருமானம் கணிசமாக குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் வாரியாக காணிக்கை வசூலான தகவல்:
2008-09 முதல் 2012-2013 வரை 24 கோடியே 83 லட்சத்து 73 ஆயிரத்து 164 ரூபாய்
2013-14 முதல் 2017-2018 வரை 40 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 880 ரூபாய்
2018-19 முதல் 2022-23 (நவம்பர் 31,2022)வரை 35 கோடியே 5 லட்சத்து ஆயிரத்து 869 ரூபாய்
காணிக்கை வசூலாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹைதராபாத் நிஜாமின் ரூ.250 கோடி சொத்துக்கு சீல்!