மதுரை : ஜெகதீசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், 'சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை மதுரை மாநகராட்சி எவ்வித முன்னேற்றத்தையும் அடையாமல் இருக்கிறது.
மேலும் நகர்ப்புற திட்டக்குழு 1971ஆம் ஆண்டு, மாஸ்டர் பிளான் திட்டத்தை அமைத்தது.
ஆனால், நகர்ப்புற திட்டக்குழு ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் வர்த்தக முன்னேற்றத்திற்கு ஏதுவாக மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 'மாஸ்டர் பிளான்' திட்டத்தை எவ்வித மாற்றமும் இன்றி உள்ளது. இதனால் மதுரை மட்டுமின்றி, தென் மாவட்டங்கள் அனைத்தும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகிறது.
மதுரை மேம்பட உதவும் திட்டம்
'மாஸ்டர் பிளான்' திட்டத்தின்படி மதுரை மாநகராட்சி செயல்பட்டால், மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் உள்ள ஊர்கள் அனைத்தும் பெரும்முன்னேற்றம் அடையும்.
மேலும் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கும். வர்த்தக ஏற்றுமதி, இறக்குமதி அதிகளவில் செய்ய முடியும். எனவே, மதுரை மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்றி அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்' என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகராட்சியின் மாஸ்டர் பிளானை மாற்றி அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: