திருச்சியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்ற நபர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் 75 விழுக்காடு டெல்டா நிலங்களில் சாகுபடி நடைபெறவில்லை.
மேலும் குளங்கள், ஆறுகள், கிணறு ஆகியவை விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் இருப்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 90 விழுக்காடு விவசாயம் நடைபெறவில்லை.
ஆறுகள், குளங்கள், கால்வாய்கள், கிணறுகள் ஆகியவற்றுக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயம் சரியாக நடைபெறவில்லை. இதனால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்ய விவசாய சங்கங்களின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் 2021ஆம் ஆண்டு விவசாயக் கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன், விவசாயத்துக்கு உபயோகப்படுத்தும் டிராக்டர், பல்வேறு சாதனங்கள் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்கள் ஆகியவற்றை வசூல் செய்வதில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றபடுகின்றன.
கரோனா தொற்று காரணமாக விவசாயிகள் நாளுக்கு நாள் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த நிலையில் கடன்களை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதனைத் தடுக்க தேசிய வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை கட்ட இரண்டு ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தளர்வு ஆகியவை மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றனர்.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் கடன் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கொண்டுசென்றுள்ளார். அதனடிப்படையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தந்தையைக் கைவிட்ட மகன்: பெட்ரோல் பங்க்கிற்கு வேலி போட்ட தந்தை!