தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லை என்பது குறித்து மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு செய்தும் முறையாக பணிகள் நடக்கவில்லை. கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளியில் செல்லும் நிலையே உள்ளது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோல், வழக்கறிஞர் ஆனந்தவள்ளி தாக்கல் செய்த மனுவில்,"அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கவும் இவற்றை எரியூட்ட அதற்கான மையம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் இலவச நாப்கின் வழங்க வேண்டும். இதனை அழிப்பதற்கான எரியூட்டும் தளத்தை ஓராண்டிற்குள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.
இந்த மனுக்களை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, " தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? இதுதொடர்பான பணிகள் ஏதேனும் நடக்கிறதா?அப்படி நடக்கும் பணிகள் எப்போது முடியும்? தலைமை ஆசிரியர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன? என்பது குறித்து ஆய்வு செய்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.26 கோடி மதிப்பில் நீதிமன்ற இணைப்பு கட்டடம் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறப்பு!