மதுரை: தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா. இவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.
கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை 2013ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனையும், கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக கீழமை நீதிமன்றம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகம், செல்வம் ஆகியோர் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வில் இன்று(ஜூன் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டைராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து கட்டை ராஜா உள்ளிட்ட 3 பேரையும் காணொலி வழியாக நாளை (ஜூன் 30) காலை 11.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு மனு: வழக்கு ஒத்திவைப்பு