ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து தன்னிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ராமநாதபுரம் காவல்துறையினர், 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் பண மோசடியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஜூலை 24ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து, சம்மனுக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு உயர் நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, இன்று (ஆகஸ்ட் 7) ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) ஞானவேல்ராஜா தரப்பில் முன் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று பஜார் காவல்நிலையத்தில் ஆஜராக உள்ள நிலையில், முன் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அதுவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.