மதுரை உலக தமிழ் சங்கத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் இன்று (செப்.08) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரநாத் குமார், மாணிக்கம் தாகூர், மதுரை ஆட்சியர் வினய் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது பேசிய ஆட்சியர் வினய், 'மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர் போலியான கணக்கு மூலம் பிரதமரின் கிசான் திட்டத்தில் நிதியுதவி பெற்றுள்ளனர். அதில், ஆறாயிரம் பேரின் வங்கிக் கணக்கிலிருந்து நிதியுதவியாக வழங்கப்பட்ட 7 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டது. மேலும் பிரதமர் கிசான் திட்ட முறைகேடு குறித்து விசாரிக்க உயர் அலுவலர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்கு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு நிதியுதவி பணம் திரும்பப் பெறப்படும்' என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறுகையில், "இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது மத்திய அரசு சார்பில் மதுரையில் நடைபெறும் 23 திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழு அமைக்கப்படும், மதுரை மாவட்டத்தில் 16,474 நபர்கள் பிரதமரின் கிசான் திட்டத்தில் பதிவு செய்து, 11 ஆயிரம் நபர்கள் முறைகேடாக நிதியுதவி பெற்றுள்ளனர். அப்படி நிதியுதவி பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது' என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா பீதிக்கிடையே பாதுகாப்பான ஹெலிகாப்டர் பயணம் - கோவையில் அறிமுகம்!