மதுரை: கரூர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டத்தில் முக்கியமான நீர் ஆதாரமாக அமராவதி ஆறு உள்ளது. கருப்பம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றின் உள்ளே சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்து டேங்கர் லாரி மூலம் தண்ணீரைத் திருடி சாயப்பட்டறைகள் மற்றும் கிரசர் ஆகியவற்றிற்கு பயன்படுத்துகின்றனர்.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதோடு விவசாயிகள் பெருமளவு பாதிப்படைகின்றனர். எனவே, தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரூர் மாவட்ட வட்டாட்சியர்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ராம்குமார் மரண வழக்கு: உடற்கூராய்வு செய்த மருத்துவர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்