மதுரை: மதுரையில் நாளை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொள்ளவிருக்கும் பொதுக்கூட்ட நிகழ்விற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி. ரவி ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எல். முருகன், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை மதுரையில் தொடங்கவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதாகவே பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். சசிகலாவின் நிலைப்பாடு என்பது அவர் வந்தபின்னர் எடுக்கும் முடிவைப் பொறுத்து அமையும்" என்றார்.
தொடர்ந்து பேசிய சி.டி. ரவி, "வரலாற்றில் முக்கிய இடமான மதுரையில் நாளை தேர்தல் பரப்புரையை ஜெ.பி. நட்டா தொடங்குகிறார். கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா இதே இடத்தில் பரப்புரை செய்தார்.
அந்த அடிப்படையில் நாங்களும் மதுரையில் பரப்புரையைத் தொடங்குகிறோம். பாஜக தமிழ் மொழி, கலாசாரத்தைப் பாதுகாக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'சீமானை விட அதிகம் தமிழை வளர்த்தவர் திருமலை நாயக்கர்'- அர்ஜுன் சம்பத்