மதுரை: காந்தி நினைவு அருங்காட்சியகத்தில், சிடார் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக 'கரோனாவை சந்திப்போம் - குழந்தைகள் சமூக கலை செயல்பாட்டு கையேடு' என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகர் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கரோனா குறித்த தங்களது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினர்.
குழந்தைகளுக்கு உந்துசக்தியாக அமையும் புத்தகம்
இதையடுத்து சிடார் அமைப்பின் நிர்வாக அறங்காவலரும், மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் முதல்வருமான முனைவர் சின்னராஜ் ஜோசப் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "வெளியிடப்பட்ட கரோனா கையேடு, குழந்தைகளுக்கு கரோனா குறித்த புரிதலை மட்டுமன்றி தங்களை அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், மற்றவர்களுக்கு இதன் தாக்கத்தை எடுத்துச் சொல்லவும், மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளின் எழுத்துத்திறன், கலைத்திறன், நடிப்புத்திறன், நாடகம், ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட திறன்களை ஊடகமாகப் பயன்படுத்தி பிற குழந்தைகளுக்கும் கரோனா விழிப்புணர்வை எடுத்துச் செல்ல உந்துசக்தியாக இது அமையும்.
விழிப்புணர்வு
பெற்றோர்களுக்கு குழந்தைகளை விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் அமையும். தகுந்த இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை குழந்தைகள் எடுத்துச் சொல்லும்போது, அதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
கரோனா பெருந்தொற்றிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்தப் பேரிடரை எதிர்த்துப் போராடக்கூடிய தன் நிலைப்பாடு கொண்டவர்கள் என்பது மிக முக்கியமான ஒன்று, அந்த அடிப்படையில் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கக்கூடிய கையேடாக இது அமைந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு