மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக கடந்த 2017ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஒரு போகம் விவசாயம் செய்ய போதிய நீர் திறந்துவிட வலியுறுத்தி மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மேலூர் காவல்துறையினர் விவசாயிகள் சங்கச் செயலாளர் முருகன், வழக்கறிஞர்கள் ஸ்டாலின், அமலன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமலன் வழக்கு தொடர்ந்திருந்தார். நீண்ட விசாரணைக்குப் பின் நீதிபதி இளங்கோவன் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தார். அதில் "விவசாயிகள், தாங்கள் விவசாயம் செய்வதற்காக தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அதனால் இது சட்டவிரோதமான போராட்டம் என்று கூற முடியாது.
மேலும் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களும் வழக்கில் காட்டப்படவில்லை. எனவே விவசாயத்திற்கு தண்ணீர் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிடுகிறேன்" என்று கூறி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: செப்டம்பரில் கோவிட் மூன்றாம் அலை? எச்சரிக்கும் நிதி ஆயோக்