மதுரை: இறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் மாவட்ட எல்லையை உள்ளிட்ட தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி, இறப்புச் சான்றிதழை மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் போதும் பொண்ணு, இவரது கணவர் கண்ணுசாமி. இவர் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி கோவை மாவட்டம் பல்லடத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது மனைவி போதும் பொண்ணு, நெகமம் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல், கணவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை ஆகியவற்றை இணைத்து, தன் கணவரின் இறப்புச் சான்றிதழ் கோரி மேலூர் கோட்டாட்சியரிடம் 2019ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் அவரது இறப்பு மதுரை மாவட்ட எல்லையில் நடைபெறாததால், இங்கு இறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது என கோட்டாட்சியர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அவர் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, தன் கணவரின் இறப்புச் சான்றிதழை வழங்க கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரரின் கணவர் கோவை மாவட்டத்தில் விபத்தில் இறந்திருந்தாலும், மனுதாரர் மேலூரில் நிரந்தர முகவரியைக் கொண்டவர் என்பதால், அவர் கணவரின் இறப்புச் சான்றிதழ் கோரி இங்கு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் இறப்பு சான்றிதழ் கோரும்போது இறப்பு, சம்பந்தப்பட்ட மாவட்ட எல்லையில் நிகழவில்லை என்பது போன்ற தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி மறுப்பு தெரிவிக்கக் கூடாது. இதனால் மனுதாரருக்கு தாமதம் இல்லாமல், உடனடியாக அவரது கணவரின் இறப்புச் சான்றிதழை மேலூர் கோட்டாட்சியர் வழங்க வேண்டும்” எனக் கூறி உத்தரவிட்டுள்ளார்.