மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை தொடர்ந்து பணப் பரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில், குறிப்பாக கூகுள் பே, பேடிஎம் , அமேசான் பே, போன் பே, போன்ற மொபைல் செயலி மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மொபைல் செயலி மூலம் பண பரிவர்த்தனையை ஏப்ரல் 6ஆம் தேதிவரை உடனடியாக தடை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்