மதுரையைச் சேர்ந்த செல்வகணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் 36 விதமான பழங்குடியின மக்கள் இருந்துவருகின்றனர். இதில் பல பழங்குடியின மக்கள் வேளாண்மை, பாடல், ஆடல், பாம்பு கடிகளுக்கு விஷம் கண்டுபிடித்தல், மருத்துவம் போன்ற தொழில்களைச் செய்துவருகின்றனர்.
பழங்குடியின மக்களின் கல்வி, வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக மத்தியப் பிரதேசம், அமர்நாத்தில் இந்திராகாந்தி பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு பழங்குடியின மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை, மருத்துவம், காடுகள் குறித்த பொருளாதாரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இதேபோல் மத்திய பழங்குடி ஆந்திரப் பல்கலைக்கழகம் ரூ.834 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின மக்கள் ஒரே பிரிவைச் சேர்ந்த மக்களாகவே இருந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் அல்லது நீலகிரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலுள்ள பழங்குடியின மக்கள் கல்வித்தகுதி வாழ்க்கை ஆகியவற்றில் பயன்பெற முடியும். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்து எந்த ஒரு பயனும் இல்லை.
எனவே, தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் அல்லது நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள், சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இது குறித்து மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.