திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "திருச்சி மண்ணச்சநல்லூர் தாலுகா திருப்பட்டூர் கைலாசநாதர் கோயில் பல்லவ மன்னர்களில் தலைசிறந்த ஒருவரான ராஜசிம்மா காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் மண்டபங்கள் உள்ளிட்டவை கடப்பா கற்களால் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிலைகளும் நமது பாரம்பரியத்தையும் கலையையும் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது. எனவே, இந்தக் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கோயிலை புனரமைப்பது குறித்து மாவட்ட அளவிலான குழு, மாநில அளவிலான குழு ஆய்வு செய்துள்ளனர். உயர்மட்ட குழு ஆய்வு செய்வதற்காக காத்திருப்பில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், 3 வாரத்திற்குள் இந்து அறநிலையத் துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி - தமிழ்நாடு அரசு