தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளை பாஜக நியமனம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகர் மாவட்ட பாஜகவின் சார்பாக பல்வேறு பிரிவுகளுக்கு பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை நியமிக்கும் பணி சென்ற வாரம் நடைபெற்றது.
அதன்படி, மதுரை மாநகர மாவட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் அயல் தேச தமிழர்களின் நலப்பிரிவு மாவட்ட தலைவராக சதீஷ் ஆசாத் என்பவரை பாஜக நியமனம் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து சதீஷ் ஆசாத் தன்னுடைய ஆதரவாளர்களுடன் மதுரை தல்லாகுளம் அருகே தமுக்கம் மைதானம் முன்புள்ள தமிழன்னை சிலைக்கு காவி துணியால் சுற்றப்பட்ட மாலையை அணிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, ஊரடங்கின் போது அனுமதியின்றி தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்த சதீஷ் ஆசாத் உள்பட நான்கு பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழன்னை சிலைக்கு பாஜகவினர் காவி மாலை!