திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில்,” திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கொங்கு உணவகம் நடத்திவருகிறேன். உலகமே இன்று கரோனா வைரஸ் தொற்றால் பேரிடரை சந்தித்துவருகிறது . கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியது. அதனடிப்படையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும், பார்சலுக்கு மட்டும் அனுமதி என்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்மூலம் தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, உணவகமும் நிபந்தனைகளுடன் செயல்பட்டது .
இந்த நிலையில் மே மாதம் 31ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டது . அதில் தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் தகுந்த இடைவெளியை கடைபிடித்து 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டது .
இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் எந்தவித தகுந்த இடைவெளியும் கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்திவருகின்றனர்.
இதனால் கரோனா வைரஸ் தொற்று வாடிக்கையாளர்களை மட்டும் பாதிக்காமல் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களையும் பாதித்தது .
கரோனா வைரஸ் பரவலை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பேரிடர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 262 இல் உள்ள , 50 விழுக்காடு இருக்கைகளுடன் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம் என்ற தளர்வை ரத்து செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுகுறித்து அலுவலர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி , உரிய புகைப்படங்களுடன் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.