மதுரை, விளக்குத்தூண், அண்ணாநகர், தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள நகை கடைகளில் நகை வாங்குவது போல சென்று பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடும் சம்பவம் தொடர்பாக ஏராளமான புகார்கள் காவல்துறைக்கு வந்தன. இதுதொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் (வடக்கு) T.K.இராஜசேகரன் நேரடி பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டன.
அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் சூரக்குமார் மற்றும் ஆய்வாளர் அனுராதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றச்செயல்களில் தொடர்புடைய நபர்கள் தேடப்பட்டு வந்தனர். கோயம்புத்தூரை சேர்ந்த அரவிந்த் (22) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கடைகளில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து சுமார் ரூ.3,53,000/- மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
கடைகளில் மற்றும் சாலையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அவரை போலீசார் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
இதையும் படிங்க: நெல்லை குவாரி விபத்தில் சிக்கியிருந்த கடைசி நபரும் சடலமாக மீட்பு; பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு