விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியானது. அன்றைய தினம் சிறப்பு காட்சி திரையிடுவது தொடர்பாக கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் 32 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி சிறப்பு காட்சி வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக்கூறி கிருஷ்ணகிரியில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவில் விஜய் ரசிகர்கள் பொதுச் சொத்துக்களை சூரையாடி ரகளையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து ரோடு ரவுண்டானா சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன.
மேலும், ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது. பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டதோடு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த அதிவிரைவுப் படை காவல் துறையினர் விஜய் ரசிகர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று மேலும் 18 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருப்பது கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் (புள்ளிங்கோ) மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பிகில்' நடிகைகளுடன் அட்லி டிக்-டாக்! இணையத்தில் பரவும் வீடியோ