கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுரை சந்திரசூடேஷ்வரர் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒசூர் மலைக்கோவில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுரை சந்திரசூடேஷ்வரர் திருக்கோயில் தேர்திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் சந்திரசூடேஷ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இன்று முக்கிய விழாவான தேர்திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை துவக்கி வைத்தனர். இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரோகரா என கோஷம் எழுப்பி பக்தர்கள் தேரை இழுத்தனர்.
தேரானது நான்கு முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தது. தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் உப்பு, பழம், மிளகு போன்றவற்றை சாமியின் மீது எரிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.