கரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் வேட்டையார்பாளையம் கிராமத்தில் உள்ள கோடங்கிபட்டியில் உள்ள தனியார் சோலார் மின் நிலையத்தில் இருந்து, வேட்டையார்பாளையம் வழியாக ஆண்டிசெட்டி பாளையம் துணைமின் நிலையத்திற்கு சாலையோரத்தில் மின் கம்பங்கள் நட்டு மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இவ்வழியாக அதிக மின்னழுத்தம் கொண்டு செல்வதால் இடி, மின்னல் நேரங்களில் வீட்டில் உள்ள மின் உபயோகப் பொருளான டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடைந்து விடுவதாக பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் குப்தா லெதர் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் 5 ஏக்கர் அளவில் சோலார் பேனல் அமைத்து, வேட்டையார்பாளையம் வழியாக ஆண்டிசெட்டி பாளையம் உள்ள துணை மின் நிலையத்திற்கு 2.கே.வி மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில் சாலையோரங்களிலும் கம்பம் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே ஒருபுறம் மின்கம்பங்கள் வழியாக மின்சாரம் செல்லும் நிலையில், தற்போது இந்தப் புதிய நிறுவனம் மற்றொரு புறமும் கம்பம் நட்டு வருகிறது. சாலையோரம் இருபுறங்களிலும் மின் கம்பம் நட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் வேட்டையார்பாளையம் ஊர் பொதுமக்கள் இந்தப் புதிய சோலார் மின் திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது மாற்று பாதையில் மின்கம்பங்கள் வகையான மின்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதையடுத்து, கரூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்டையார் பாளையம் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கிராம மக்கள் தங்களின் கோரிக்கை தெரிவித்தனர்.
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் சோலார் மின்உற்பத்தி பிரச்சினை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்கள் பிரச்சினைக்காக வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யத்திட்டமில்லை - மத்திய அரசு