கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள நன்னியூர்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் - சித்ரா தம்பதி. இவர்களது மகன் தங்கதுரை (10) அரசுப் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.
சிறுவன் தங்கதுரை, உறவினர் சக்திவேலின் மகன் சுஜித் (10) ஆகியோர் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கீழே விழும் தேங்காய்களை எடுத்து விளையாடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று (ஜூன் 15) தேங்காய் தோப்புக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
இது குறித்து, தங்கதுரையின் தாய் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில், வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இரு சிறுவர்களையும் வெங்கமேடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 16) என்.புதூர் பகுதியைச் சேர்ந்த சிவசாமி, கணேசன், சிதம்பரம் ஆகியோரின் 20 அடி விவசாய கிணற்றில் சிறுவர்களின் உடல்கள் மிதப்பதை கண்டறிந்தனர். இச்சம்பவம், குறித்து பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
காவல்துறையினர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், கிணற்றில் மிதந்த சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாஞ்சா கயிற்றால் விபரீதம்: கழுத்தில் நூல் அறுத்து காயம்