கரூர்: கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகள் மார்ச் 9ஆம் தேதி முதல் காலவரையின்றி ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது.
தமிழ்நாட்டில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் வகை 1, 2, 3 என பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் அரசு மதுபான கடைகள் இயங்கத் தொடங்கியது.
ஆனால், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. தற்பொழுது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு விதிமுறைகள் இன்று (ஜூலை 5) முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதனால், கரூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட உள்ளது.
டாஸ்மாக்கில் சாமியானா
இதனால் ஒவ்வொரு மதுக்கடைகளின் முன்பும் பொதுமக்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்கவும், மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லவும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மட்டும் போதுமா?
இதனிடையே கரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் முல்லையரசு கூறுகையில், "மதுப் பிரியர்களை வரவேற்க உற்சாகமாக மதுபான கடைகளில் தீவிர ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்க பொதுமக்கள் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதேபோல, தடுப்பூசி மையங்களில் காலை 11 மணி வரை நீண்ட வரிசையில் வயதானவர்கள், பெண்கள் என அனைவரும் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஆனால் அங்கெல்லாம் பொதுமக்களுக்கு எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்காமல் மதுக்கடைகளுக்கு முன்பு தடபுடலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வருத்தத்தை அளிக்கிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 31 பேர் உயிரிழப்பு