கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கரூர்-கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, நெசவாளர் அணி மாநில தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சின்னசாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், கரூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது "கரூர் தொகுதியில் ஆளும் அதிமுக அமைச்சர் 12 நிறுவனங்களை நடத்தி அதில் வருமானம் பெற்றதாகக் கூறுகிறார். அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற வருமானத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமானத்தை விட பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு தற்போது சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.
அவர் சேர்த்த சொத்துப் பட்டியல் அடங்கிய பத்திரங்களை தினமும் ஒவ்வொன்றாக வெளியிட்டு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். அமைச்சர் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் சொத்துக்களை மலைபோல வாங்கி குவித்துள்ளார். முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களாலே தமிழ்நாடு அரசின் கடன் தொகை ஐந்து லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து துறையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மக்களால் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார் தம்பிதுரை. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இப்போது தேர்தல் அறிவித்ததால் மக்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது அவரது சொத்துக்கள் குறித்தும் கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் குறித்தும் பட்டியல் வெளியிட்டும். தம்பித்துரையால் கரூர் தொகுதிக்கு எந்த திட்டமும் கொண்டு வர முடியவில்லை. அதிமுக எனும் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என வாக்காளர்கள் முடிவு செய்துவிட்டனர்" என்றார்.