கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் காந்தியின் தண்டி யாத்திரையின் நினைவு நாளில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பாத யாத்திரை சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் மீது காவல் துறையினர் தடியடி மேற்கொண்டனர்.
இந்தத் தடியடியில் பத்து பேர் காயமடைந்ததோடு, ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், சம்பவம் தொடர்பான வழக்கை திரும்பப் பெறக்கேட்டும் தடியடிக்கு காரணமான காவல் துறை அலுலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் குளச்சல் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டபேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உள்பட ஏராளானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அமைதியாக பாத யாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் போராட்டம் நடைபெறும்' என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கூறுகையில், 'திங்களன்று சட்டபேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளோம். தீர்மானத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சட்டப்பேரவைக் கூட்டத்தை புறக்கணிப்போம்' என்றார்.
இதையும் படிங்க... குமரியில் அனுமதியின்றி பாத யாத்திரை: காவல் துறையினர் தடியடி