கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே வெள்ளமோடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இதில், 17 வயதுடைய மகள் மருத்துவமனையில் தங்கி, தாயை கவனித்துவந்தார். அச்சிறுமி அடிக்கடி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றுவர, பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசுதன் (27) என்பவரது ஆட்டோவை வாடகைக்கு எடுத்தனர். இதனால் சிறுமிக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜூலை 20ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் வீட்டிற்குச் சென்ற 17 வயது சிறுமி மாயமானார். இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ஜெயசுதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் தாய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த இரண்டு நாள்களில், 16 வயதான மற்றொரு மகளும் மாயமானார். பின்னர், இது குறித்து தந்தை அளித்தப் புகாரின் அடிப்படையில், சிறுமியின் சித்தப்பா முறை உறவுகொண்ட ஐயப்பன் என்பவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர்.
சிறுமிகள் இருவரும் நாகர்கோவில் அருகேவுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற காவல் துறையினர், சிறுமிகளை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் ஜெயசுதன், ஐயப்பன் ஆகியோரைக் கைதுசெய்து, நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது!