கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகள், இங்குள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களை ரசித்துவிட்டு செல்கின்றனர்.
சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக, கன்னியாகுமரியில் 100க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கன்னியாகுமரி காவல்துறையினர், ஆணின் சட்டைப்பையில் இருந்த அடையாள ஆவணங்களை சரிபார்த்தபோது, அவரது பெயர் போஸ் என்பதும், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட காவல்துறையில் டிரைவராக பணியாற்றி வருவரும் தெரியவந்தது.
விசாரணையில், போஸ் அப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் பெண் ஒருவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதிக்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
அவரை மீட்ட காவல்துறையினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்ட போஸ் உடலையும் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். போஸ் தற்கொலை குறித்து கேரள மாநில காவல் துறைக்கு, கன்னியாகுமரி காவல்துறையினர் தகவல் அளித்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான போஸ், 40, சுப்ரியா, 30 என்ற பெண்ணுடன் கன்னியாகுமரியிலுள்ள தனியார் விடுதியில், கடந்த 6ஆம் தேதி அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். பின்னர், இருவரும் கன்னியாகுமரியில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றி பார்த்துள்ளனர்.
போஸுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், சுப்ரியாவுக்கு திருமணமாகி விவாகாரத்து பெற்றவர் என்பதும், இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ஊரைவிட்டு வெளியேறி கன்னியாகுமரிக்கு வந்துள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் தாங்கள் கொண்டு வந்த பணம் தீரும் வரை முக்கிய சுற்றுலா பகுதிகளுக்குச் சுற்றியநிலையில், இன்று விஷமருந்தி இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுப்ரியா மாயமானது குறித்தும், போஸ் மாயமானது குறித்தும் அவர்களது உறவினர்கள் கேரள மாநிலத்திலுள்ள காவல்நிலையங்களில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவலருடன் வந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளதா, எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து இருமாநில காவல்துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை கூர்நோக்குப் பள்ளியை அடித்து நொறுக்கி சிறுவர்கள் ரகளை!