சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 11ஆம் நாளான இன்று, தேரோட்டம் பக்தர்கள் சூழ, அய்யா முழக்கம் செவி அதிர சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை அய்யாவுக்குச் சிறப்புப் பணிவிடையும், அதனைத் தொடர்ந்து தலைமை பதியிலிருந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் தேருக்குப் புறப்படும் நிகழ்ச்சி அரங்கேறியது.
பகல் 12 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ணத் தேரில் வைகுண்டசாமி வீற்றிருக்கத் தேரோட்டம் தொடங்கியது. முத்துக் குடைகள் முன்செல்ல, அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவ சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி முழக்கமிட்டுத் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார்.
இந்த திருத்தேரானது கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாகச் சுற்றி வந்து வடக்கு ரத வீதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வந்து நின்றது. பின், வடக்கு வாசல் முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றைச் சுருளாகப் படைத்து வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திலிருந்து, சாமித்தோப்புக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்தையொட்டி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.