புரெவி புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,” புரெவி புயலை எதிர்கொள்ள முதலமைச்சர் 36 வருவாய் மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார், புயலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புரெவி புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது. குமரி மாவட்டத்தில் இருந்து உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் ஒரு வாரமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் கரைக்கு திரும்பவேண்டும், யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்தோம்.
அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காற்று 90 கி.மீ வேகத்தில் இருக்கலாம். பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. கஜா புயலைப் போன்று அதே வலுவுடன் வருவதால் அதை கையாள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அனைத்து உணவு பொருட்கள், மீட்பு படை, கடற்படை தயாராக இருக்கிறது. பிரதமர் நேற்று அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பாராட்டு தெரிவித்தார். மருத்துவ வசதிகளுடன் உதவ கப்பல் படை தயாராக இருபதாக பிரதமர் கூறியுள்ளார். அணைகள், ஏரிகள், கண்மாய்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் கரை உடையும் பகுதியில் கூடுதல் கவனம் கொடுக்கப்படுகிறது. இன்று இரவு அல்லது நாளை இரவு கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் அச்சப்பட தேவை இல்லை.
தாழ்வான, கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்காக முகாம்கள் தயாராக இருக்கின்றன. இன்னும் கரை திரும்பாத 106 படகு குறித்த விவரம் கொடுத்திருக்கிறார்கள். மாலத்தீவு, கோவா, ரத்தினகிரி, லட்சத்தீவு, மும்பை ஆகிய இடங்களில் இந்த மீனவர்கள் இருக்கிறார்கள். பாதிக்கப்படக்கூடிய 76 இடங்கள் கண்டறியப்பட்டு மண்டல குழுக்கள் போடப்பட்டுள்ளன.
செயற்கைக்கோள் போனில் சரியான தகவல் கிடைக்கவில்லை என அலுவலர்கள் கூறுகின்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மீனவர் குடும்பத்தினரிடம் தகவல் கொடுத்துள்ளனர். ஆழ்கடலுக்குள் தகவல் சொல்லவில்லை என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால் மீனவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
சேட்டிலைட் போன் வேறு எந்த மாநிலத்திலும் கொடுக்கவில்லை. மீனவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், கரைக்கு வரவேண்டும் என எச்சரிக்கை அறிவித்துள்ளோம்.
இங்குள்ள மக்கள் நிவாரண முகாமுக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். ஒக்கி புயலில் குத்தகை விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பெயர்களுக்குத்தான் நிவாரணம் வழங்கப்படும். அரசு ஆவணங்கள் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.