கன்னியாகுமரி மாவட்டம், கீழமணக்குடி-மேல மணக்குடி இடையே இருந்த பிரமாண்ட பாலமானது 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கு தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. பின்னர் சுமார் 21 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சென்னை நேப்பியர் பாலம் போன்று, பிரமாண்ட பாலம் இப்பகுதியில் அமைக்கப்பட்டது.
இந்தப் பாலத்திற்கு காமராஜர் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமனின் பெயரை சூட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அண்மையில் குமரி மாவட்டத்திற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயர் சூட்டப்படும் என்று உறுதியளித்து விட்டுச் சென்றார். இந்நிலையில் பாலத்தின் இரண்டு பக்கத்திலும் லூர்தம்மாள் சைமன் பாலம் என்ற பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மீனவ மக்கள் மகிழ்ச்சியடைந்ததோடு, முதலமைச்சருக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உலக அரங்கில் தமிழ் வர்ணனையை தூவிய அப்துல் ஜப்பார் காலமானார்!