கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அருகே அமைந்துள்ளது ஆரல்வாய்மொழி, குமார புரம், தோவாளை ஆகிய சுற்று வட்டார கிராமங்கள். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பதையே முக்கியத் தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியைச் சேர்ந்த தாணுப்பிள்ளை என்பவர் தனது வீட்டின் அருகே அமைந்துள்ள தோட்டத்தில் ஆட்டு பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று, இரை தேடி தாணுப்பிள்ளையின் ஆட்டு மந்தைக்குள் நுழைந்து ஆடு ஒன்றை கடித்து கொண்டு இருந்தது. இதைக் கண்ட மற்ற ஆடுகள் சத்தமிட்டன.
ஆடுகளின் சத்தம் கேட்டு ஆட்டு மந்தைக்கு வந்த தாணுப்பிள்ளை அங்கு சிறுத்தை நின்று இருப்பதையும்; ஆட்டைக் கடித்து வைத்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
அதனைத் தொடர்ந்து, உடனே கிராம மக்கள் அனைவரும் வந்து கூச்சலிட்டு சத்தமிடவே, சிறுத்தை ஆட்டை கடித்துக் கொண்டு வனப்பகுதிக்குள் ஓடி தப்பிச் சென்றது.
ஆனால், சிறுத்தை மீண்டும் இரை தேடி கிராமப் பகுதிகளில் நுழைய வாய்ப்புள்ளதால் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; கிராம மக்கள் அச்சதுடன் தெரிவித்துள்ளனர். இதேபோல், கடந்த மாதம் ஆரல்வாய்மொழி பகுதியில் புகுந்த சிறுத்தை இரண்டு ஆடுகளைக் கடித்து இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - ஆடுகள் பலி