குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதி உள்ளது. இந்த பதியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்ட சாமியின் ஜெயந்தி நாளான மாசி 20ஆம் தேதியை வைகுண்டர் அவதார தினமாக அய்யா வழி மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் வைகுண்டசாமியின் 188ஆவது அவதார தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அஞ்சுகிராமம் விநாயகர் கோயில் முன்பிருந்து ரஸ்தாகாடு கடற்கரை வரை சமய நல்லிணக்க ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும் திரைப்பட இயக்குநருமான பி.டி செல்வகுமார் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது, பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”அய்யா வைகுண்டசாமி, மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டினார், அனைத்து மக்களும் ஒரே குடையின் கீழ் வாழவேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு வலியுறுத்திய மகானாக திகழ்ந்தார்.
அவரது அவதார தினத்தை அனைத்து மக்களும் சாதி, மத, பேதமின்றி கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் அவரது பெருமைகளை சிறப்பிக்கும் வகையில் குமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் புதிய சாலைக்கு அய்யா வைகுண்டரின் பெயரை சூட்ட வேண்டும். அவரது அவதார நாளான மாசி 20ஆம் தேதி மதுக்கடைகளை மூடவேண்டும்.
மேலும் அய்யாவின் அவதார நாளை அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறையாக அரசு அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!