தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச்10) மாலை அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய்சுந்தரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பிறந்தார். இவரது தந்தை நரசிங்கம்பிள்ளை (ஓய்வு பெற்ற ஆசிரியர்) மற்றும் தாயார் தம்புராட்டி அம்மா ஆவர்.
இவரது மனைவி ராஜலட்சுமி (அரசு வழக்கறிஞர்), காலமாகிவிட்டார். இவரது ஒரே மகளான தமிழரசி குழந்தை நல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். மருமகன் சண்முக பூபதியும் எலும்புமுறிவு நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.
தளவாய் சுந்தரம் முதல்முறையாக தென்சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக அதிமுகவில் பணியாற்றினார். அப்போது மறைந்த முன்னாள் முதலமைசர் ஜெயலலிதாவின் வழக்குகளில், இவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி செயல்பட்டு வந்த காரணத்தால், 1996ஆம் ஆண்டு இவருக்கு மாநிலங்களவை எம்பி பதவியை ஜெயலலிதா வழங்கினார்.
1998ஆம் ஆண்டு வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும், 2007ஆம் ஆண்டு ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு மாநில அமைப்புச் செயலாளராக பதவி வகித்தார். 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக பதவி வகித்தார்.
2011ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். ஐந்து ஆண்டுகள் எம்பி பதவி வகித்த தளவாய் சுந்தரத்திற்கு 2001ஆம் ஆண்டு கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஜெயலலிதா வழங்கினார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தளவாய்சுந்தரம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் வருவாய் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராகவும், அதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது நான்காவது முறையாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்கு தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு