உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு மருத்துவ நிர்வாகத் துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கன்னியாகுமரி, கொட்டாரத்தில் உள்ள செவிலியர் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடைகளில் இருந்து ஒரு பொருளை வாங்கும் முன்பு அது எங்கு தயாரானது, அதன் தரம், காலாவதியான தேதி ஆகியவற்றை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும். இவ்வாறு பொருட்களை கேட்டு வாங்கினால், தயாரிக்கும் நிறுவனங்களும் இன்னும் கூடுதல் கவனத்தோடு இருக்கும். தற்போது அடிக்கடி ஓட்டலில் சென்று சாப்பிடும் நிலை உள்ளது. அங்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதில்லை. இதை அரசு அலுவலர்கள் தொடர்ந்து கவனிக்க முடியாது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் விழிப்போடு நடந்துகொள்ள வேண்டும்" என்றார்.