கன்னியாகுமரி: சபரிமலை சீசனை அடுத்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுற்றுத் தலங்களுக்கு வரும் பயணிகளை நம்பி பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் பல லட்ச ரூபாய் கடன் பெற்று முதலீடு செய்து தொழில் நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்த வியாபாரிகளுக்கு தலைவலியாக பேரூராட்சி அதிகாரிகளின் பண வசூல் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரியில் முக்கிய சீசன் காலங்களில் நடைபாதை மற்றும் காலியான இடங்களில் கடை அமைத்து வியாபாரம் செய்ய டெண்டர் விடப்பட்டு அதில் இருந்து பேரூராட்சி நிர்வாகம் வருமானம் பார்த்து வருகிறது.
சீசன் காலக்கட்டத்தில் கன்னியாகுமரிக்கு படையெடுக்கும் நரிக்குறவ மக்கள், அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ஊசி, பாசி, முத்துமாலைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் சீசனுக்கு வியாபாரம் செய்ய வந்த நரிக்குறவ இனமக்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் நாளொன்றுக்கு 50 ரூபாய் கட்டாய வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் தங்களிடம் தினசரி 50 ரூபாய் பறித்து செல்லுவது அதிர்ச்சியை தருவதாக நரிக்குறவ இன மக்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் இன மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் இலவசமாக பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குறவ மக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் வேதனையை சரிசெய்யும் வகையில் கட்டாய வசூல் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டாய வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மற்றும் நரிக்குறவர் இன மக்கள் பேசி வெளியான வீடியோ வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தந்தையின் கல்லறையில் கதறி அழுத காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற வீரமங்கை